பகுதி 1
முன்னுரை
இந்திய நாட்டு மக்கள் 16வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்ற நிலையில் தான் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் நிலவும் பெரும் பணநாயகத்தின் வலிமையானது தொடர்ந்து ஜனநாயகத்தின் வலுவை சீர்குலைத்து வருகிறது. பொதுவாழ்விலும் அரசின் உயர்மட்டத்திலும் புரையோடிப் போயுள்ள கட்டுக்கடங்காத ஊழலானது ஜனநாயக அமைப்பின் உயிர்நிலைகளை சீழ்பிடிக்கச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பின்பற்றி வந்த புதிய தாராளவாதக் கொள்கைகள் நாடாளுமன்றத்தைத் தரமிழக்கச் செய்துள்ளதோடு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், இவற்றிற்கு அடிபணிந்து நடக்கும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணியின் முடிவுகளுக்கு இணங்கவே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படும் நிலைக்கும் அது தள்ளப்பட்டுள்ளது.